‘கோச்சடையான்’ எப்போ வரும்? எப்படி வரும்? என்பது ரஜினிக்கே தெரியாது. அந்தளவுக்கு அவரது மகளும் டைரக்டருமான செளந்தர்யா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலைச் சொல்லி ரசிகர்களை குழப்பி வருகிறார்.


அதேநேரம் ரஜினியும் சும்மா இருக்க விரும்பவில்லை. அதனால் அவரது அடுத்த படத்துக்காக வேலைகளில் இறங்கி விட்டார். ஷங்கர், கே.வி ஆனந்த், சுரேஷ் கிருஷ்ணா என பல டைரக்டர்களை மீடியாக்கள் லிஸ்ட் போட்டு எழுதினாலும் ரஜினியின் சாய்ஸ் என்னவோ கே.எஸ்ரவிக்குமார் தான். ஆமாம், அவர்தான் ரஜினியின் அடுத்த படத்தை டைரக்ட் செய்கிறாராம்.

முழுக்க முழுக்க ஒரு குடும்ப காமெடிப்படமாக தயாராகும் இதில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்‌ஷி சின்காவும் அனுஷ்காவும் நடிக்கிறார்கள்.

கன்னடத்தில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ராக்லைன் வெங்கடேஷ் தான் இந்தப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் விக்ரம் நடித்த ‘மஜா’ படத்தை தயாரித்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழில் இந்தப்படத்தை தயாரிக்கிறார்.

படத்தின் வசனத்தை ‘சாருலதா’ பட டைரக்டர் பொன் குமரன் எழுத, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒரே கட்டமாக தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும் இதன் படப்பிடிப்பு இந்தமாதம் 20 ஆம் தேதி மைசூரில் ஆரம்பமாகிறது. இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.
 
Top